எண்ணெய் - எரிவாயு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் சீனாதான்! - ஒபாமா
இதுகுறித்து ஒபாமா நேற்று கூறுகையில், "எண்ணெய் சந்தை நிச்சயமற்றதாக உள்ளது. அதேநேரம், வல்லரசுகளாக வளரும் சில நாடுகளின் அதிக தேவை எண்ணெய்ப் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைதான் இன்றைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
அதே நேரம் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இப்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிப்போம்," என்றார்.
உலகில் அதிக அளவு பெட்ரோல், டீஸல் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகள்தான் உலக எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்தி வந்தன.
இப்போது சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக வளரத் தொடங்கியுள்ளன. வாகனப் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் தேவையும் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் இதனை இப்போது வளர்ந்த நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடாகவே ஒபாமாவின் பேச்சு பார்க்கப்படுகிறது!