ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 3 அமைச்சர்களின் தொகுதிகளை தாரைவார்த்த திமுக
சென்னை: தற்போதைய திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்களின் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி உறுப்பினராக உள்ள சென்னை, அண்ணாநகர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆலந்தூர், அமைச்சர் செல்வராஜின் முசிறி ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது திமுக.
ஆற்காடு வீராசாமியின் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளதால் அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது கல்தா தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரம் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஆலந்தூரைப் பிரித்துத்தான் பல்லாவரம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முசிறியை இழந்துள்ள செல்வராஜுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்ச்சநல்லூர் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மட்டுமே கிடைத்தது. இப்போது அந்தத் தொகுதியை திமுக தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. அங்கு திமுக சார்பில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்து சேர்ந்த பி.கே.சேகர்பாபுவை திமுக நிறுத்தும் என்று தெரிகிறது.
அதேசமயம், காங்கிரஸுக்கு இந்த முறை 5 தொகுதிகளை சென்னையில் கொடுத்துள்ளது திமுக.












Click it and Unblock the Notifications