பணத்தை துரத்தித் துரத்திப் பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள்
சென்னை தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் நடத்தி வரும் பண வேட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக எங்கு பணம் இருந்தாலும் அதை வளைத்து வளைத்து அவர்கள் பிடித்து வருவதால் தமிழகத்தில் பணப் புழக்கம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ரூ. 1லட்சம் மொத்தமாக கொண்டு செல்லக் கூடாது, வங்கியிலிருந்து எடுக்கக் கூடாது. இப்படி யார் செய்தாலும் அதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கும், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைக் கண்காணித்து பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தனிப்படை போலீஸாரின் உதவியுடன் தேர்தல்அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 20 கோடிக்கும் மேல் இதுவரை சிக்கியுள்ளது.
சாலைகளில் செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் படையும் தடுத்து நிறுத்தி பணம் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் இருந்தால் உடனே பறிமுதல் செய்யப்படுகிறது.
இதேபோல வியாபாரிகளிடமும் ரெய்டுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பணப் புழக்கம் குறித்து கணக்கெடுத்து அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டுக்குச் சென்ற தேர்தல் அதிகாரி ஜெகதீஸ்வரி, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பண இருப்பு குறித்து விசாரணை நடத்தினார். இதேபோல மொத்த கடைகளிலும் ரெய்டுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் வியாபாரிகள்தான் புலம்புகின்றனர். வியாபாரத்திற்காகப் பணம் வைத்திருந்தால் கூட பறிமுதல் செய்து கொண்டு போய் விடுகிறார்கள் என்று அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications