தொடரும் தேமுதிக சிக்கல்-இன்று வெளியாகுமா அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்?
சென்னை: கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டு, பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.
இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் கூட்டஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால், தேமுதிகவுடன் சிக்கல் நீடிப்பதால் இன்றாவது அந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயுள்ளனர்.
சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.