நீண்ட விடுப்பில் செல்லும் லத்திகா சரண், ஜாபர் சேட்-தேர்தல் ஆணையம் உத்தரவு?
சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் ஆகிய இருவரையும் நீண்ட விடுப்பில் செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலையடுத்து கடும் கெடுபிடிகளை கையாண்டு வருகிறது தேர்தல் ஆணையம். பீகார் தேர்தலை விட மிகக் கடுமையான கெடுபிடிகளை இந்தத் தேர்தலில் கையாள்வோம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது. தற்போது அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் அதிரடி ரெய்டுகளில் அது ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 ஆயிரம் ரூபாயைக் கூட மொத்தமாக எடுத்துக் கொண்டு சுதந்திரமாக செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல காவல்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் என உயர் அதிகாரிகளும் சரமாரியாக மாற்றப்பட்டு வருகின்றனர். டிஜிபி லத்திகா சரணையே தேர்தல் ஆணையம் மாற்றி விட்டது. மேலும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் தற்போது டிஜிபி லத்திகா சரணும், ஜாபர்சேட்டும் திடீரென விடுமுறையில் போகவுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை.
ஜாபர்சேட் டெல்லி தேர்தல் ஆணைய விசாரணைக்குப் போனபோது அவரை மேற்கு வங்க தேர்தல் பணி தலைமைப் பார்வையாளராக நியமிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் அதை ஜாபர்சேட் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் விடுமுறையில் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லத்திகா சரணும், ஜாபர் சேட்டும் விடுமுறையில் செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.