நெல்லை-தூத்துக்குடி: காங். எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இரண்டு வேட்பாளர்கள் புதுமுகங்கள்.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கடையநல்லூர், நான்குநேரியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மறுசீரமைப்பில் சாத்தான்குளம், சேரன்மகாதேவி தொகுதிகள் பறிபோனது. சட்டசபையில் இந்த முறையும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், நான்குநேரி, கடையநல்லூர், வாசுதேவநல்லுர் தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார், கடையநல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சுடலையாண்டி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொகுதிகளில் மீண்டும் இவர்களே போட்டியிடுகின்றனர்.
சேரன்மகாதேவி தொகுதி நீக்கப்பட்டதால் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ராதாபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தொகுதிக்கு பதிலாக கிடைக்க விளாத்திகுளம் தொகுதியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கதிர்வேல் கேட்டு வந்த நிலையில் இளைஞர் காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் கதிர்வேல் மகன் பெருமாள்சாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாசுதேவநல்லூர் தொகுதி தனி தொகுதி என்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உறவினரான கணேசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் விளாத்திகுளம், வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் இருவரும் புதுமுகங்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications