108 ஆம்புலன்ஸ் மூலம் பாஸ் ஆகும் பணம்?-தேர்தல் ஆணையம் விசாரணை
நெல்லை: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக வந்துள்ள புகார்களைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறதாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அனைத்து ஊர்களிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் தினமும் கட்டு கட்டாக பணம் சிக்குகிறது.
போலீசாரின் கண்ணில் மண்ணை தூவ தற்போது அரசியல் கட்சிகள் 108 ஆம்புலன்ஸை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்புலன்சில் சைரனை போட்டுக் கொண்டால் போலீசார் அதனை நிறுத்தி சோதனை செய்வதில்லை. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் எடுத்துச் சென்று வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்பட்டு வருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். தேவைப்பட்டால், சந்தேகம் வந்தால் 108 ஆம்புலன்ஸ உள்பட அனைத்து ஆம்புலன்களையும் கூட சோதனையிடலாமா என்பது குறித்து அதிகாரிகள் யோசித்து வருகிறார்களாம்.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ரெய்டுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி சோதனையிட்டால் பெரும் பிரளயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.