திருப்பூர் வடக்கில் சிக்கல் தீர்ந்தது-140 சுயேச்சைகளும் வாபஸ் பெற முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த 140 பேரும் இன்று முதல் வாபஸ் பெறுவார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதால், இத்தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு சுமூக நிலை உருவாகியுள்ளது.

திருப்பூர் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் செயலற்ற போக்கைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் ஆயிரம் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் 140 வேட்பாளர்களை இந்த அமைப்பு சுயேச்சைகளாக களம் இறக்கியது. இதனால் திருப்பூர் வடக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரையும் சேர்த்து மொத்தம் 151 வேட்பாளர்கள் நின்றனர். இதனால் இங்கு தேர்தல் நடத்துவது பெரும் கேள்விக்குறியாக மாறியது.

இந்த வேட்பாளர்கள் வாபஸ் பெறாவிட்டால் இங்கு உடனடியாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் வாக்குச் சீட்டு முறைப்படிதான் தேர்தலை நடத்த முடியும். அதிலும் வாக்குச் சீட்டுக்களை ஏப்ரல் 13ம் தேதிக்குள் அடித்து முடித்து தயார் நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் தேர்தல் இங்கு மட்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தொழில் பாதுகாப்பு அமைப்பை சமாதானப்படுத்த முடிவு செய்தன. இதையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக பிரதிநிதிகள், அக்கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருப்பூர் மேயர் செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோவிந்தசாமி, அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் எம்.பி. சிவசாமி, காங்கிரஸ் சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாயக் கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தாங்கள் முயல்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தொழில் பாதுகாப்புக் குழு, தனது 140 வேட்பாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து

குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் எங்களை சந்தித்து சாய கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார்கள். மேலும் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசும்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பூர் வரும் போது, இதற்கான உறுதி அளிப்பார் என்று தெரிவித்தார்.

அதுபோல் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தேர்தல் பிரசாரத்திற்காக திருப்பூர் வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இதற்கான உறுதி அளிப்பார்' என்று கூறினார்.

அவர்கள் கொடுத்த உறுதிமொழியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் முழு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 140 பேரும்தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+