தமிழக மக்களுக்கு இது வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல்-ஜெ.
சென்னையில் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்தார். பின்னர் பிரசார முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் எனக்கோ, எங்கள் கட்சிக்கோ வாழ்வா சாவா என தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும். தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால், வரும் தேர்தலில் தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.
நான் ஊழல்வாதி என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில் அர்த்தமில்லை. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. எங்கள் கட்சியும் ஊழல் செய்யவில்லை. ஆனால், அரசியல் உள்நோக்கம் காரணமாக தி.மு.க. அரசில் என் மீது பல பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் பொருளாதார நிலைமை மிகவும் நல்ல நிலையில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் நிலைமை குறித்து அவருக்கு எதுவுமே தெரியாது
கடுமையான ஊழல், முன்னெப்போதும் இருந்திராத விலைவாசி உயர்வு ஆகியவற்றால் தமிழக மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத் துறை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொழில் துறையில் வளர்ச்சியில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் கடும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து கூறும் முன், இங்குள்ள உண்மை விவரங்களை தெரிந்து கொண்டு பிரணாப் முகர்ஜி பேச வேண்டும்.
நான் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்புக்கு வந்தால், தி.மு.க.வைச் சேர்ந்தவர்களில் யார் யாரெல்லாம் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயப்படும். ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக பாலக்கோடு அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன், பென்னாகரம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்.நஞ்சப்பன், தர்மபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்து பேசுகையில்,
தமிழகத்தில் நடைபெற்ற உள்ள தேர்தல் மற்றொரு சுதந்திர போராட்டம். இப்போராட்டத்தில் ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்கவேண்டும். தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்யம், மணல் கொள்ளை, ஊழல், எந்த தொழிலையும் எங்கும் யாரும் செய்ய முடியாத வகையில் அக்கிரமம். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கள்ள லாட்டரி என சமூக அக்கிரமங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்கப் போவது எப்போது என நல்லோரின் மனச்சாட்சி கேட்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் தண்டனை கொடுக்கப்போவது எப்போது என நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. எங்கும் எதிலும் ஊழல் என்ற சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது இத்தேர்தல்.
தமிழகத்தை பொருளாதார வளர்ச்சி மாநிலமாக மாற்றவும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாகவும் மாற்றவும் திமுக ஆட்சியால் முடியாது. எங்களால் முடியும்.வெள்ளைக்காரர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற சுதந்திர போராட்டம் நடத்தியதுபோன்று கொள்ளைக்காரர்களிடமிருந்து தமிழகத்தை காக்க மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்பதே வரும் சட்டமன்ற தேர்தல் மத்தியில் அமைச்சர் பதவியும்
மாநிலத்தில் ஆட்சியையும் வைத்துக் கொண்டு வேறு எங்கும் காண முடியாத ஊழலை புரிந்து அதிசயிக்க வைத்துள்ளனர். பீகார், குஜராத், பஞ்சாப் மாநில வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிடுகையில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தின் வாரிசுக்காகவே ஆட்சி நடத்தியதே இதற்கு காரணம்.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ள திமுகவையும் அதன் கூட்டணியையும் 234 தொகுதிகளி லும் டெபாசிட் இழக்கச்செய்து தமிழக மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும். தமிழக மக்களின் உழைப்பை சுரண்டியதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
தமிழகம் முதன்மை மாநிலமாக மாற அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்றார்.
பிரச்சாரம் செய்ய கடைசி நாளான இன்று ஜெயலலிதா வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்.