கொளத்தூர் பார்வையற்ற மாணவிக்கு ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: கொளத்தூரில் வசிக்கும் பார்வையற்ற மாணவியின் பிறந்தநாளன்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனால் அம்மாணவியின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின் போது தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் பள்ளியில் உள்ள பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது பிறந்தநாளின் போது அந்த பள்ளிக்கு ஸ்டாலின் சென்றார்.
அப்போது அங்கு பார்வையில்லாத மாணவி பெனோ என்பவர் தனது அறிவாற்றலால் துணை முதல்வர் கவனத்தை ஈர்த்தார். பின்னர் தனக்கு அமெரிக்காவில் நடக்கும் இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளதாகவும், ஆனால் தனது குடும்பத்தாரால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், துணை முதல்வரிடம் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். பெனோவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் அரசு சார்பில் ரூ. 4 1/2 லட்சம் வழங்கி அமெரிக்கா அனுப்பி வைத்தார். மேலும், பெனோவை அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் வீட்டிலேயே தங்க வைத்தார்.
அவரும் அமெரிக்க மாநாட்டில் அருமையாகப் பேசி பெருமையுடன் தாயகம் திரும்பினார். அந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பெனோவும், பெனோ பிறந்தநாளுக்கு ஸ்டாலினும் வாழ்த்து தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையி்ல் நேற்று பெனோ தனது பிறந்தநாளை கொண்டாடினார். துணை முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு ஸ்டாலினோ நீ வர வேண்டாம் அம்மா, நானே வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து ஸ்டாலின் பெனோவின் வீட்டுக்கு சென்று அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். துணை முதல்வரே தங்களது மகளின் பிறந்தநாளை கொண்டாட வீட்டுக்கு வந்ததில் பெனோவின் குடும்பத்தார் திக்கிமுக்காடிவிட்டனர்.
பெனோ தற்போது பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொணடார் என்பது குறிப்பிடத்தக்கது.