தமிழகம்-புதுச்சேரியில் இன்றும் கன மழை
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் மாராண்ட ஹள்ளியில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதே போல குன்னூர், பட்டுக்கோட்டை, செங்கோட்டை, தென்காசி, கரூர், திருமங்கலம், சிதம்பரம், பட்டுக்கோட்டை, பாலக்கோடு, அரவாக்குறிச்சி, மருங்காபுரி, சமயபுரம், பேராவூரணி, ஆலங்குடி, தேன்கனிக்கோட்டை, துறையூர், ஆண்டிப்பட்டி, பெரியாறு அணை, அறந்தாங்கி, சிவகிரி, கன்னியாகுமரி, பேச்சிப்பாறை, அரக்கோணம், வேலூர், அஞ்சட்டி, தர்மபுரி, வால்பாறை, கோத்தகிரி, முசிறி, மேட்டுப்பாளையம், மேலூர், தேனி, நிலக்கோட்டை ஆகிய இடங்களிலும் கன மழை பெய்தது.
கோடை மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் மின்னல் தாக்கியதில் இசக்கிமுத்து என்பவர் பரிதாபமாக உயிர் இழந்தார். சீதற்பநல்லூர் அருகே வல்லவன்கோட்டை தெற்கு தெருவைச்சேர்ந்த கிருஷ்ணன் மனைவி வெள்ளத்தாய் (35). இவர் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பலியானார்.
அரக்கோணம் அருகே பழைய ஒச்சலம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரை(48) என்ற விவசாயி மின்னல் தாக்கி பலியானார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ வீரரின் வீடு இடிந்து அவரது இரு குழந்தைகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் சூறாவளி-கடும் கடல் கொந்தளிப்பு: படகுகள் சேதம்
இந் நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்றிரவு திடீரென்று பலத்த சூறாவளி காற்று வீசியது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் துறைமுக பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தன. இதைத்தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தற்போது மீன்பிடிக்க தடை காலம் என்பதால் ராமேசுவரம் கடற்கரை ஓரம் நங்கூரமிட்டு ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக நங்கூரத்தை அறுத்துக் கொண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி தள்ளின. இதில் நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications