இந்தியாவின் ஐபிஎல்லுக்கு போட்டியாக இலங்கையின் எல்பிஎல்!!
கொழும்பு: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லைப் போல, இலங்கையில் எல்பிஎல் எனும் பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சாதனையாளர் கபில்தேவால் உருவாக்கப்பட்டது ஐசிஎல் (இந்திய கிரிக்கெட் லீக்). ஜீ குழுமத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ கடுமையாக எதிர்த்ததது. அதில் விளையாடிய வீரர்களுக்கெல்லாம் தடை போட்டது. இதனை எதிர்த்து ஐசிஎல் வீரர்கள் நீதிமன்றத்துக்குப் போய் ஜெயித்ததெல்லாம் தனிக் கதை. கடைசியில் அந்த ஐசிஎல்லை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பிசிசிஐ உருவாக்கிய அமைப்புதான் இப்போதைய ஐபிஎல்.
அணிகளின் பெயர்கள் கூட, ஐசிஎல்லில் இருப்பதைப் போன்றே காப்பியடித்து வைத்தனர். ஐசிசியை கைக்குள் வைத்திருக்கும் தைரியத்தில் தன்னை மீறி யாரும் கிரிக்கெட் அமைப்பை உருவாக்கிவிடக் கூடாது என சர்வாதிகார எண்ணத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
ஐசிசியின் ஒத்துழைப்பின்மை மற்றும் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைத் தர மறுப்பது போன்ற பல்வேறு தடைகளால் ஐசிஎல் முடங்கிப் போனது.
இப்போது ஐபிஎல் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த நிலையில், ஐபிஎல்லை அப்படியே காப்படியடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் எல்பிஎல் எனும் போட்டியை இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் போட்டியிலும் ஐபிஎல் போன்றே அணிகள் உருவாக்கப்படுகின்றன. கிழக்கு இலங்கை, தெற்கு இலங்கை, மத்திய மாகாண அணி என்றெல்லாம் அணிகள் உருவாக்கப்பட்டு, அதில் சர்வதேச ஆட்டக்காரர்களை ஆட வைக்கும் முயற்சயில் உள்ளது இலங்கை.
இதில் முன்கூட்டியே இடம்பெற்றுவிட்டார்கள் பாகிஸ்தான் வீரர்கள். ஷாகித் அப்ரிதி தலைமையில் ஒரு அணி எல்பிஎல்லில் ஆடுகிறது. வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாடும் வீரர்களுக்கான ரேட் அன்றைய அவர்களது 'மார்க்கெட்' மதிப்புக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.
இலங்கையின் இந்த கிரிக்கெட் அமைப்புக்கு ஏற்கெனவே ஐசிசி அனுமதி அளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.