மாசாணியம்மன் கோவிலில் விடப்பட்ட அனாதை குழந்தையை தத்து எடுக்க கடும் போட்டி
பொள்ளாச்சி: புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆற்றங்கரையில் அனாதையாக விடப்பட்ட பெண்குழந்தையைத் தத்தெடுக்க கடும்போட்டி நிலவுகிறது.
கைவிடப்பட்ட குழந்தை
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ளது புகழ்மிக்க மாசாணியம்மன் கோவில். இக்கோவில் அருகே உள்ள உப்பாற்றங்கரையில் பிறந்து 3 நாளே ஆன ஒரு பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கோவில் நிர்வாகத்தினரால் கண்டெடுக்கப்பட்டது.
அரசுமருத்துவமனையில் ஒப்படைப்பு
கோவில் நிர்வாகத்தினர் மேற்படி குழந்தையை ஆனைமலை காவல்துறையின் உதவியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் செய்தி பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயென பரவியது. இதனை கேள்விப்பட்ட குழந்தை இல்லாத பல தம்பதியினர் நேற்று அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
தத்து எடுக்க விருப்பம்
அங்கிருந்த முதன்மை மருத்துவரைச் சந்தித்து குழந்தையை தாங்கள் தத்தெடுக்க விரும்புவதாகவும், நல்ல முறையில் தாங்கள் வளர்த்துக் கொள்வதாகவும் அவர்கள் உறுதி கூறினார்கள். திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும் கூட சில தம்பதிகள் வந்திருந்தனர். உள்ளூர்க்காரர்கள் வெளியூர்க்காரர்களென இதுவரை குழந்தையைக் கேட்டு சுமார் 15 தம்பதிகள் வந்துள்ளனர்.
கொடுக்க முடியாது
தத்து எடுக்க விரும்புபவர்களிடம் தலைமை மருத்துவர் “குழந்தை இன்னும் பலகீனமாக உள்ளது. இன்னும் இரண்டொரு நாள் சிகிச்சைக்குப் பிறகே எதுவும் செய்ய முடியும். அதுவுமில்லாமல் அரசு அனுமதி இல்லாமல் தத்து கொடுக்க முடியாது. மேலதிக விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரை அணுகவும் என தெரிவித்துவிட்டார். தம்பதிகள் பெருமளவில் குவிந்ததால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.