லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சென்னை: தமிழக டிஜிபியாக மீண்டும் லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அரசு உத்தரவை ரத்து செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிறைத்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற நடராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து லத்திகா சரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
நான் 1976-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி ஐபிஎஸ் அதிகாரி ஆனேன். நான் பல பதவிகளை வகித்துள்ளேன். சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுகளை பெற்றுள்ளேன்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டேன். இதை எதிர்த்து தீயணைப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர்.நடராஜ் (ஓய்வு) மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். டிஜிபி நியமனத்தில் விதிமுறை மீறல் நடக்கவில்லை என்று கூறி அவரது மனுவை தீர்ப்பாயம் 8-3-10 அன்று தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். டிஜிபி நியமனத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவரது மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
நான் டிஜிபியாக செயல்படாமல், டிஜிபி பொறுப்பில் மட்டுமே இருக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஜிபி பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயரை பட்டியலிட்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த பட்டியலில் இருக்கும் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி யு.பி.எஸ்.சி. பட்டியலை அனுப்பி வைத்தது. அதில் எனது பெயர் இருந்ததால் நான் மீண்டும் டிஜிபியாக நியமிக்கப்பட்டேன். இதற்கான உத்தரவை 27-11-10 அன்று அரசு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆர்.நடராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீண்டநாட்களாக விசாரணையில் இருந்தது. கடைசியாக 29.4.11 அன்று வந்த வழக்கு, அடுத்த கட்ட விசாரணைக்காக 1.6.11 அன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் உடனடியாக விசாரணையை நடத்த வேண்டுமென்று ஆர்.நடராஜ் 25.5.11 அன்று மனு தாக்கல் செய்ததன் பேரில், விசாரணை நடத்தப்பட்டு 31.5.11 அன்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
அதில் 27-11-10 அன்று என்னை டிஜிபியாக நியமித்து அரசு பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேதியில் இருந்து ஆர்.நடராஜை டிஜிபியாக நியமிக்க பரிசீலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவறான தீர்ப்பு ஆகும்.
யு.பி.எஸ்.சி. அனுப்பிய பட்டியலில் ஆர்.நடராஜின் பெயர் முதலில் இருந்ததால், அவர் தான் டிஜிபியாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்னைவிட அவருக்கு பணிமூப்பு அவருக்கு அதிகம் இருந்ததால் அவரது பெயர் பட்டியலில் முதலில் இருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டிஜிபி நியமனத்தில் பணிமூப்பு பரிசீலிக்கப்பட வேண்டியதில்லை. அந்தப் பதவிக்கு பணிமூப்பு ஒரு அளவுகோல் அல்ல. எனது நியமனத்தை ரத்து செய்வதற்கு வேறு சரியான காரணங்களை தீர்ப்பாயம் கூறவில்லை. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார் லத்திகா.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், டிரிப்யூனல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.