சிகாகோ கோர்ட்டில் ராணா மீதான விசாரணை முடிந்தது-விரைவில் தீ்ர்ப்பு
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான தஹவூர் ராணா மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் சிகாகோவில் வைத்து எப்பிஐ படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீது பயங்கரவாத செயல்கள், சதிச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களில் ஹெட்லி, ராணாவுக்கு எதிரானவராக, அப்ரூவராக மாறியுள்ளார். மரண தண்டனையிலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு மாறியுள்ளார்.
இதில் ராணா மீதான வழக்கு சிகாகோ கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது ராணாவுக்கு எதிராக ஹெட்லி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், ராணுவமும் எந்த அளவுக்கு பயங்கரமான சதிச் செயல்களில் ஈடுபட்டன என்பதை புட்டுப் புட்டு வைத்தார். மேலும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளையும் அவர் புட்டுப் புட்டு வைத்தார்.
இந்த வாதங்களை ராணாவின் வக்கீல் முழுமையாக மறுத்து வாதாடினார். இதையடுத்து வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தது. அரசுத் தரப்பும், ராணா தரப்பும் தங்களது இறுதி வாதங்களை எடுத்து வைத்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளனர்.
50 வயதான ராணா மீது முக்கியக் குற்றவாளி ஹெட்லியைக் காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தது, மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கான பூர்வாங்க பணிகளைச் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் டேணியல் காலின்ஸ் வாதிடுகையில், ஹெட்லியை நம்பி ராணா மோசம் போனதாகவோ, ஹெட்லி ராணாவை பிரெய்ன் வாஷ் செய்து ஏமாற்றியதாகவோ கூற முடியாது. தீவிரவாத செயல்களில் ராணாக தானாக முன்வந்து ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் உள்ளன.
மும்பையில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த பயங்கரவாத செயல்களுக்கு முழுமையான காரணம் ராணாவும், ஹெட்லியும்தான். அப்பாவி மக்களைக் கொல்ல ஹெட்லி துடித்தது இந்த நண்பருக்கு (ராணா) முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.
மும்பையில் நடந்தது ஒரு வேளை கோபன்ஹேகனில் நடந்திருக்கலாம். தீவிரவாதிகளின் புல்லட் மழைக்கு 164 அப்பாவிகளின் உயிர்கள் மும்பையில் மரித்துப் போயுள்லன. இதுபோன்ற கொடூரமான, கோரமான சம்பவத்தை ஒரு நபர், இருநபர் அல்லாமல் மிகப் பெரிய கட்டமைப்பின் உதவியுடன்தான் நிகழ்த்த முடியும்.
துப்பாக்கியை ஏந்திச் சென்றால்தான் தீவிரவாதி என்று கூற முடியாது. மாறாக, துப்பாக்கியை எடுத்து் செல்பவருக்கு பெரும் உதவிகளைச் செய்வதும் கூட தீவிரவாதம்தான்.
ஹெட்லி தன்னை ஏமாற்றி விட்டதாக ராணா கூறுவது ஏற்கக் கூடியதல்ல. உண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்துதான் உலகையே ஏமாற்றியுள்ளனர். ஏன், எப்பிஐயையும் கூட ஏமாற்றியுள்ளனர் என்றார்.
ராணாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் பாட்ரிக் ப்ளீகன் கூறுகையில், ஹெட்லி அனைவரையும் ஏமாற்றியுள்ளார். உங்களையும் (நீதிபதிகளை) ஏமாற்றப் பார்க்கிறார். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். ராணாவை இந்த வழக்கில் தண்டிக்கக் கூடாது.
ராணா ஒருசாதாரண பிஸினஸ்மேன். தனது பிஸினஸை மும்பை, லாகூர், கராச்சி, டென்மார்க்கில் விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.
ஆனால் ராணாவின் திட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஹெட்லி. தனது திட்டங்களுக்கு ராணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தீவிரவாத செயல்களுக்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் இன்று ராணாவை தியாகம் செய்து விட்டார் ஹெட்லி. ஹெட்லியின் திட்டங்கள் எதுவும் ராணாவுக்குத் தெரியாது என்பதே உண்மை என்றார் அவர்.
இரு தரப்பு இறுதி வாதங்களையும் கேட்டு முடித்துள்ள 12 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விரைவில் தீர்ப்பை வெளியிடவுள்ளது.