தலித் பெண் தலைவருக்கு அரிவாள் வெட்டு-ஜெயலலிதா தலையிட சிபிஎம் கோரிக்கை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணியை தாக்கிய சமூக விரோதிகள் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சி.பி.எம். கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியின் தலைவராக கிருஷ்ணவேணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தலித் சமுதாயத்தை (அருந்ததியர்) சேர்ந்தவர்.
ஒரு தலித் பெண் ஊராட்சித் தலைவராக செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், இவருக்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வந்துள்ளதோடு மிரட்டியும் , இவர் ஊராட்சித் தலைவராக செயல்படுவதற்கு தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தியும் வந்துள்ளனர்.
இப் பிரச்சனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில், கடந்த ஜூன் 13 ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியை சாதி வெறி கொண்ட ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் கிருஷ்ணவேணி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஏற்கனவே இவரை மிரட்டியும், இடையூறும் செய்து வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத்தால் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இத் தாக்குதல் நடத் திய சாதி வெறி கொண்ட சமூக விரோத சக்திகளையும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இப் பிரச்சனையில், தமிழக முதல்வர் உடனே தலையிட்டு கிருஷ்ணவேணியைத் தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும், கிருஷ்ண வேணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம் என்று அக்கட்சி கோரியுள்ளது.