திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகனை தினமும் சட்டசபைக்கு அழைத்துச் செல்ல போலீஸுக்கு கோர்ட் உத்தரவு
சென்னை : திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகனை, புழல் சிறைக்கு மாற்றி அங்கிருந்து தினசரி சட்டசபைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் ஒரு மில்லை அபகரித்து விட்டதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரியும், சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதில்,
மில் அபகரிப்பு வழக்கில் கைது செய்து போலீசார் என்னை சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனவே அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல சென்னை தி.நகரில் நடந்த ஒரு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாகவும் முன்ஜாமீன் கோரியிருந்தார் அன்பழகன்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி ராஜ சூரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக ஜெ.அன்பழகனை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். அங்கிருந்து தினமும் சட்டசபைக்கு அவரை அழைத்துவர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று காலை புழல் சிறைக்கு அவரை கோவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். இங்கிருந்து அவர் தினசரி சட்டசபைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டம் முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.