கச்சத்தீவை மீட்பதை விட ராமேஸ்வரம் கடற்கரையை மீட்க வேண்டியது அவசியம்- மீனவர்கள் கோரிக்கை
ராமேஸ்வரம்: கச்சதீவை மீட்கும் முன்பு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் ராமேஸ்வரம் கடற்கரையை மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
பல நூற்றாண்டுளாக, ராமேஸ்வரம் தீவில் உள்ள கடற்கரை கிராமங்களின் கரையை ஒட்டியுள்ள பகுதியில் மீன்பிடி வலைகளையும், பொருட்களையும், கட்டுமரங்களையும் வைத்து கடற்கரை கிராம மீனவர்கள் பராமரித்து வருகின்றோம்.
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரைக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்குமால்-ஒலைக்குடா மீனவ கிராம மக்களை கடற்கரையில் இருந்து முற்றிலுமாக அப்புறபடுத்த பல்வேறு சக்திகள் முயன்று வருகின்றன. அவர்கள் தாக்குதலில், இப்பகுதி கடற்கரையோர பூர்வீக மீனவர்கள் கடும் துயரம் அடைந்து வருகின்றனர்.
சங்குமால் கடற்கரை- சங்குமால்-ஓலைக்குடா, வடகாடு, மாங்காடு, சம்பை, சேராங்கோட்டை, கரையூர், தங்கச்சிமடம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி மற்றும் பல இடங்கள் மீனவர்களின் பயன்பாட்டில் தான் உள்ளது. குறிப்பாக கடற்கரையோர மக்கள் குடிசைகளை காலி செய்து ராமேஸ்வரம் நகராட்சியால் சிறுவர் பூங்கா அமைக்க முயன்று வருகின்றது.
சிறுவர் பூங்கா அமைத்ததால், கடற்கரையை சுற்றி வேலி அமைத்து, மீனவர்கள் நீண்டதூரம் சுற்றி கடலுக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே, சங்குமால் மீனவர் தொகுப்பு வீடுகள் கட்டாமல் மீனவர்களை அப்புறப்படுத்துவது நியாமற்ற செயல் என, மீனவர்கள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட கோரி்க்கைகளை முன்வைத்தும், மீனவ மக்களைக் காப்பாற்ற கோரியும், அனைத்து கட்சி சார்பில் ராமேஸ்வரம் நகராட்சி முன்பு கண்டன போராட்டம் நடந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு நகராட்சியின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த கோரிக்கையை அனைத்து கட்சி சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.