சுதந்திர தினம்: மேலப்பாளையத்தில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு- தீவிர சோதனை
நெல்லை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற இருந்த சுதந்திர தின அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலப்பாளையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் துவங்கி ஆமீன்புரம் 7-வது தெருவரை அணிவகுப்பு நடத்த அவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
மேலும் இன்று இரவில் ஆமீனாள் புரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி அவர்கள் அணிவகுப்பு, பொதுக் கூட்டம் நடத்தலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையொட்டி அங்கு சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலப்பாளையம் சந்தை முனையில் துவங்கி விஎஸ்டி பள்ளிவாசல் வரை ஒவ்வொரு அடிக்கும் 10 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் துணை கமிஷனர் மாஸ்ட்ர் லியோ, உதவி கமிஷனர்கள் ராமசந்திரன், ஆறுமுகம் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையி்ட்டனர். அப்போது அணிவகுப்புக்கான பஸ்களை கொண்டு வந்த இருவர் சிக்கினர். அவர்களிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் பொதுகூட்ட துண்டு பிரசுரங்களை கொண்டு வந்த ஒருவரும் போலீசார் சோதனையில் சிக்கினார். மேலப்பாளையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின அணிவகுப்பு காரணமாக நெல்லை மாநகரத்தில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழா அணிவகுப்பு காரணமாக பாளை வஉசி மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலப்பாளையம் அணிவகுப்பு காரணமாக அனைத்து போலீசாரும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடையநல்லூரில் பதற்றம்-போலீஸ் குவிப்பு
இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் அணிவகுப்பு மற்றும் பொது கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அணிவகுப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனாலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தலாம் என்றுகருதப்பட்டது. இதனால் அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டிருந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் பாளை மேல்ப்பாளையம், கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள காயிதே மில்லத் திடலில் இருந்த கொடிகம்பத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் பிடுங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லுர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கொடி கம்பத்தை பிடுங்கி எடுத்தவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்களோ இது நாங்கள் வைத்த கொடி கம்புதான் என்று கூறி கொடி கம்பத்தை பிடுங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு புளியங்குடி போலீ்ஸ் சூப்பிரண்டு ஜாமீம் மற்றும் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
கொடிகம்பத்தை பிடுங்கியவர்களுடன் துணை சூப்பிரண்டு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்பு அவர்கள் கொடி கம்பத்தை பிடுங்குவதை விட்டு விட்டு கலைந்து செனறனர்.
பின்னர் இன்று காலை கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் புதிய கொடிகம்பத்தை நட்டினர். மேலும் அங்கு ஏரளமானோர் திரண்டனர். ஆகவே அவர்கள் அணிவகுப்பு நடத்தலாம் என்று கருதப்பட்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கபபட்டனர். ஆனால் அந்த அமைப்பினர் அணிவகுப்பு நடத்தவில்லை.
காலை 9.40 மணி அளவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஜபருல்லா தேசிய கொடி ஏற்றினார். சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.