2ஜி: தனியே வழக்கு நடத்த சுப்பிரமணிய சாமிக்கு நீதிமன்றம் அனுமதி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, அது குறித்த தனது புகாரின் மீது தனியே வழக்கு நடத்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கோரி சாமி தாக்கல் செய்த மனு நீதிபதியால் பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து நடந்த விவாதத்தின்போது பேசிய சாமி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான முக்கிய முடிவுகளை அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் சேர்ந்து தான் எடுத்துள்ளார். ஆனால், அவரது பெயரை சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று மனு மீது நீதிபதி சைனி தனது தீர்ப்பை அறிவித்தார். 2ஜி விவகாரம் தொடர்பாக சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ள புகார் மனுவின் அடிப்படையில் அவர் இந்த நீதிமன்றத்தில் தனியே வழக்கை நடத்தலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்துப் பேசிய சாமி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரும் என மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் செப்டம்பர் 1ம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
இதனால் அந்தத் தீர்ப்பு கிடைத்த பின்னர், இந்த வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்கக் கோரும் விண்ணப்பத்தை இங்கு சமர்பிக்கிறேன். அதற்கு கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதை அனுமதித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications