இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு 1 ரூவா கூட தரலை: ஜெ
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் வீட்டு வசதி, இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கம், தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ): இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். அந்த வகையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. மாணவர்கள், இளைஞர்கள்தான் நம் நாட்டின் சொத்து...
முதல்வர் ஜெயலலிதா (இடைமறித்து): இங்கே காங்கிரஸ் உறுப்பினர் பேசும்போது மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் சொத்து என்றார். இளைஞர் நலனை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டும் தான் உள்ளதா? மத்திய அரசுக்கு இல்லையா?. மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.
பிரின்ஸ்: இதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா: நன்றியெல்லாம் இருக்கட்டும். மத்திய அரசுக்கு இளைஞர் நலன், மாணவர் நலன் பற்றி மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லையா?
பிரின்ஸ்: கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.
ஜெயலலிதா: திரும்ப திரும்ப கேட்டு கிடைக்காததினால் தான் இங்கே நான் சொல்கிறேன். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் தரப்படும் என்ற வார்த்தை மத்திய அரசுக்கு பொருந்தாது. தமிழக அரசுக்குத் தான் பொருந்தும். மக்கள் கேட்பதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
பிரின்ஸ்: கம்ப்யூட்டர் வாங்க மத்திய அரசிடம் நிதி கேட்ட விஷயமே இப்போதுதான் எனக்குத் தெரியும்.
ஜெயலலிதா: டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த போது இதைப் பற்றி வலியுறுத்தி அறிக்கை கொடுத்திருக்கிறேன். என்னென்ன தேவை என்பதை புத்தகமாகத் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன். எந்த திட்டத்திற்கெல்லாம் உதவி கேட்டோம் என்பது எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. உங்களுக்கு தெரியாது. உறுப்பினருக்கு பத்திரிகை பார்க்கும் பழக்கம் இல்லை போலியிருக்கிறது.
நாங்கள் மத்திய அரசிடம் சிறப்பு திட்டத்திற்கு ரூ. 2.5 லட்சம் கோடி சிறப்பு நிதி கேட்டோம். அவ்வளவு தராவிட்டாலும் ரூ. 10,000 கோடி ரூபாய் தந்திருந்தாலும் கூட தமிழக அரசு வரி போடும் நிலை வந்திருக்காது என்றார்.