ஜெயலலிதாவுக்கு தங்கபாலு திடீர் பாராட்டு!
சென்னை: மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், குமரித் தந்தை என்று போற்றப்படும் மார்ஷல் நேசமணி அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
குமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தை கடந்த 1948ம் ஆண்டு முதலே தொடங்கி தொடர்ந்து தொய்வின்றி நடத்தி 1956ம் ஆண்டில் வெற்றி கண்ட தாய் மண் காத்த வீரர் அவர்.
காங்கிரஸ் சார்பில் 1952, 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957ல் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த நாடாளுமன்றவாதியாகப் புகழ் பெற்றவர்.
நேரு, காமராஜர் ஆகிய தேசியத் தலைவர்களோடு இணைந்து மக்கள் தொண்டாற்றிய அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதை ஏற்று கடந்த தி.மு.க அரசு சார்பில் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பிலுள்ள நகரமன்ற பூங்கா அருகில் நிலம் ஒதுக்கப்பட்டு மணி மண்டபத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந் நிலையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெறும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications