19 ஆண்டுக்குப் பின்னர் பரபரப்பான வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் 29ம் தேதி தீர்ப்பு
தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான தர்மபுரியில், அரூர் அருகே உள்ள குக்கிராமம்தான் வாச்சாத்தி. ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமம். கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.
ஜூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து துவம்சம் செய்தனர். பின்னர் வீட்டில்இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் மிருகத்தை விடவும் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர்.
பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை ரேஞ்சர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸார், வனத்துறையினல், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தார். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர் போராட்டம் நடத்தியும் நீதி கிடைக்காத காரணத்தால் மலைவாழ்மக்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக்குழுவினர் நடத்திய சோதனையின் போது நடந்தவற்றை முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சார்பில் குழு ஒன்று விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
சிபிஐக்கு மாற்றம்
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாச்சாத்தி வழக்கில் வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்துறையினர் என 269 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் போலீஸார்.இவர்களில் ஒரு எஸ்பியும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர்.
வழக்கு விசாரணை மந்த கதியில் நடைபெறவே வாச்சாத்தி வழக்கானது 1996-ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணை 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சத்தி வழக்குத் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்படைந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.
வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது மொத்தம் 53 பேர் உயிரிழந்து விட்டனர்.
விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வாச்சாத்தி மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தர்மபுரி நீதிமன்றம் முன்பு திரண்டிருந்தனர். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 216 பேரில் இன்று மூன்று பேர் ஆஜராகவில்லை என்பதால் தீர்ப்பினை வரும் 29-க்கு மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி குமரகுரு ஒத்தி வைத்தார். இன்று ஆஜராகாத மூவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
இதனை கேட்டு ஏமாற்றமடைந்த மலைவாழ் மக்கள் தீர்ப்பினை தாமதப்படுத்தவேண்டும் என்பதற்காகவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்று ஆஜராகவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
இரண்டு நாள் கழித்து வழங்கப்பட்டாலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்பான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்திருக்கிறது தமிழ்நாடு. வாச்சாத்தி பாலியல் வழக்கில் தர்மபுரி அமர்வு நீதி மன்றம் வழங்கப்பட உள்ள தீர்ப்பு வன்கொடுமைக்கு ஆளான மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.