குஜராத் கலவர வழக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம்-சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான கலவர வழக்குகளை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், விதிமுறைப்படி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்ற கண்காணிப்பு முடிவுக்கு வர வேண்டும். ஆனால் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்குகளை கண்காணித்து வருவது சரியில்ல என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் மாநில அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைகளை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினர்.
சமீபத்தில் 2ஜி வழக்கின் விசாரணையை கண்காணிப்பதை உச்சநீதிமன்றம் கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எல்லை மீறக் கூடாது என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதே பாணியில்தான் தற்போது குஜராத் அரசும் உச்சநீதிமன்றத்தை நாடியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குஜராத் அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இது குஜராத் அரசுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.