ஒபாமா இப்போது 'தம்' அடிப்பதில்லை, 'பக்கா'வாக உள்ளார்- டாக்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக நிறுத்தி விட்டார் என்பது ஒபாமாவுக்கு நடத்தப்பட்ட சமீபத்திய மருத்துவ சோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிக அளவில் சிகரெட் பிடித்து வந்தார். கடந்த 2006ம் ஆண்டு முதல் அதை நிறுத்த முயன்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்டர் ஜெப்ரி.சி.குல்மேன் அவருக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டார். அவரது மருத்துவ அறிக்கையி்ல் அதிக அளவிலான சிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். உடல் கொழுப்பு அளவும் அதிகமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 50வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஒபாமா சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினார். மேலும் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் டாக்டர் ஜெப்ரி.சி.குல்மேன் நடத்திய 2வது மருத்துவ சோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
2 பக்க மருத்துவ அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆரோக்கியமாக உள்ளார். சத்தான உணவுகளை சாப்பிடுகிறார். சரியான உடல் எடையில் இருக்கிறார். சில நேரங்களில் மட்டுமே மது அருந்துகிறார். கடந்த முறையை விட தற்போது அவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவரது உடல் கொழுப்பு சாதாரண அளவில் தான் உள்ளது. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தனது பணிகளை தொடர முழு உடல் தகுதியுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா சிகரெட் பிடிப்பதை நிறுத்தியது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
எல்லாப் புகழும் மிஷலுக்கே!