மைக் இணைப்பு துண்டிப்பு : காங்கிரஸ், திமுக வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளமல் புறக்கணித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களை பேச விடாமல் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அக்கட்சி உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு துணை சபாநாயகர் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் பதவி ஏற்புக்காக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. துணை சபாநாயகர் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தவிர எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடாத காரணத்தால் மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.பி.ஆர்.செல்வம் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

துணைசபாநாயகர்

இதையடுத்து சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் சபாபதி துணை சபாநாயகராக தேர்வு செய்யப் பட்ட டி.பி.ஆர்.செல்வத்தை துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார். பின்னர் இந்திராநகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து துணை சபாநாயகராக பதவி ஏற்ற டி.பி.ஆர்.செல்வத்தை வாழ்த்தி பேசுமாறு சபாநாயகர் சபாபதி உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

எதிர்கட்சிகள் புகார்

அப்போது எழுந்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் வைத்திலிங்கம், புதுச்சேரியில் சட்டம்ஓழுங்கு பிரச்சனை, தரமற்ற இலவச அரிசி வழங்குதல், அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் மீது ஆள்மாறாட்டம் செய்து பரிட்சை எழுதிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சபையில் பேச வேண்டி இருப்பதால் அதற்கான அனுமதியை சபாநாயகர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு சபாநாயகர் சபாபதி துணை சபாநாயகரை வாழ்த்தி பேசிவிட்டு பின்னர் பிரச்சனை குறித்து பேசலாம் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், மக்கள் பிரச்சனை தான் முக்கியம். அது பற்றி பேச வேண்டும் கூறி பிரச்சனையை பற்றி பேசினார். மக்களுக்கு தரமற்ற இலவச அரிசி வழங்கப்படுகிறது என்று வைத்திலிங்கம் குற்றம் சாட்டியதால் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

வெளிநடப்பு

இதையடுத்து சபாநாயகர் பேசும் போது, முதல்வர் மைக்கை தவிர அனைத்து மைக்குகள் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேச முற்பட்டார். அப்போது எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே வந்த எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் வீட்டின் அருகே அவரது கட்சியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட போது முதல்வர் ரங்கசாமி அமைதியாக அமர்ந்திருந்தார். இதே போல் அமைச்சர் கல்யாண சுந்தரம் பற்றி கேட்ட போதும் முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும் சபையில் மைக் இணைப்பை துண்டித்து மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுத்ததால் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது என்றார்.

இதே காரணத்திற்காக தாங்களும் வெளிநடப்பு செய்ததாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+