உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வு: நாளை முதல் சிஇஓ அலுவலகத்தில் விண்ணப்ப வினியோகம்
நெல்லை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் சிஇஓ அலுவலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
தொடக்கக் கல்வி துறையில் காலியாக உள்ள 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(ஏஇஓ) பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம கடந்த 25ம் தேதி அறிவி்ப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வு வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விற்பனை நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் (சிஇஓ) இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.50. பி.ஏ., பி.எஸ்.சி., பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் பாடப்பிரிவில் 3, ஆங்கிலம் 4, கணிதம் 3, இயற்பியல் 3, வேதியியல் 6, தாவரவியல் 4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 ஆகிய காலியிடங்கள் உள்ளன.
தேர்வுக்கு விண்ணபிக்கும் பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். போட்டித் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 32 மாவட்ட தலைநகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது.
பொதுப்பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை டீச்சர் ரெக்ரூட்மெண்ட் போர்டு, சென்னை என்ற பெயரில் செனனையில் மாற்றத்தக்க வகையில், குறுக்கு கோடிட்ட டிமாண்ட் டிராப்ட் ஆக செலுத்த வேண்டும்.
ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மட்டுமே டிடி எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வாங்கிய மையத்திலேயே சமர்பிக்க வேண்டும்.