பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா: தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டிருந்தால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவில்லை.
நாங்கள் எந்த யோசனையை சொன்னாலும் அதை காங்கிரஸ் ஏற்பதும் இல்லை.
இப்போது பெட்ரோல் விலையை இரவோடு இரவாக உயர்த்தியுள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதை காரணம் காட்டுகிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, ஏன் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை?.
விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருந்தால், மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற வேண்டிய நிலை வரும். இதற்காக மத்திய அரசை மிரட்டுகிறோம் எனறு பொருளில்லை என்றார்.