தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு 29 பேர் பலி-பெரும்பாலான அணைகள் நிரம்பின
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொட்டி வரும் கன மழைக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோரம் உள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரகாலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சுருளி அருவி, கும்பக்கரை நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் எமாற்றமடைந்துள்ளனர்.
மதுரையில் வைகை ஆற்றில் தரைப்பாலத்தை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்வதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு கரைகளிலும் போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வேடசந்தூர் அருகே குடகனாறு அணை நிரம்பியுள்ளது. மதகுகளின் ஷட்டர் பழுதடைந்துள்ளதால் ஒரு ஷட்டர் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. அனைத்து ஷட்டர்களும் உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
29 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாற்றால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டார்.
ஈரோடு நகரில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கோவை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து ஒருவர் மரணமடைந்தார். அரியலூர் தொடர்மழைகாரணமாக சுவர் இடிந்து விழுந்து மூன்றுபேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதும் கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications