குமரி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தரப்பட்ட பெண்ணின் உடல்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இறந்து போன பெண்ணின் உடலை அவரது குழந்தைகள் மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுத்தனர். அந்த பெண்ணின் கண்களும் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
நாகர்கோவில் அடுத்த பெருவிளை ராஜலெட்சுமி நகரை சேர்ந்தவர் மால் நாடார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட ஸ்ரீமதி நேற்று முன்தினம் இறந்தார். அவரது விருப்பப்படி கண்கள் நெல்லையிலுள்ள கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. அவரது உடல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்காக குமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்ரீமதியின் மகள்கள் மற்றும் மகன், உறவினர்கள் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் உடலை ஓப்படைத்தனர். இது குறித்து பேசிய அந்த பெண்ணின் மூத்த மகள் விஜி, தங்களின் தாயார் உடல் மற்றும் கண் தானம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததாக கூறினார்.
இறக்கும் தருவாயில் கூட கண்ணையும், உடலையும் தானமாக கொடுத்து விடுங்கள். மண்ணில் போட்டு புதைத்து விடாதீர்கள் எனக் கேட்டு கொண்டார். அவரது விருப்பபடியே உடலையும், கண்ணையும் தானமாக கொடுத்துள்ளோம் என்றார்.