உயர் நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும்: கருணாநிதி நம்பிக்கை
கனிமொழிக்கு தொடர்ந்து 4வது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இநநிலையில் தான் திமுக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. தன் மகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடிவுகாலம் பிறக்கும் என்று கருணாநிதி நம்புகிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாதென்று மத்திய அரசு ஒருபுறம் கூற, மறுபுறம் அதை பாஜக தலைவர் நிதின் கட்காரி கடுமையாக எதிர்க்கிறாரே? இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். அடுத்தவர்கள் கருத்து பற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாகப் பேசியிருக்கிறாரே?
பதில்: நோ கமென்ட்ஸ்
கேள்வி: கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறீர்களே?
பதில்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி: காங்கிரஸுடனான கூட்டணி பற்றி?
பதில்: எந்நிலையிலும் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலின்போது மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் விதிகளை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆளும் கட்சிக்கு அனுசரணையாக நடப்பதற்காகவே மாநில தேர்தல் ஆணையராக சோ. அய்யர் நியமிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த அய்யர், தமிழக அரசை புகழ்ந்து தள்ளினார்.
தேர்தல் ஆணையர் அதிமுகவுக்கு வேண்டியவர் என்பதைப் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு, தனித் தொகுதிகள், பெண்களுக்கான தொகுதிகள் பற்றி அறிவிக்காதது என அதிமுகவுக்கு ஆதரவாகவே அவர் நடந்து கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்த நேரத்தில், ஆளும் கட்சி நலத் திட்டங்களை அறிவித்தது. இது குறித்து ஆணயத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விதிகளுக்கு மாறாக அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டதை தேர்தல் ஆணையர் கண்டுகொள்ளவில்லை.
திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் பல வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. பிற மாநிலங்களிலிருந்து போதுமான காவல்துறையினர் வரவழைக்கப்படவில்லை. வாக்குப் பதிவின்போது சென்னையிலும், பல்வேறு நகரங்களிலும் ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தவறு என்றும் சுயேச்சைகளின் வெற்றியை அதிமுகவின் வெற்றியாக கணக்கில் எடுத்துக் கொண்டதாகவும் வெளியான செய்திகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சோ. அய்யரின் நடுநிலைமை பற்றி அவரது மனசாட்சியே சொல்லும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.