இத்தாலியின் கடும் நிதி நெருக்கடி.. பதவி விலகுகிறார் 'செக்ஸ் மன்னன்' பெர்லுஸ்கோனி!
அயர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் நாடுகளைத் தொடர்ந்து தற்போது இத்தாலியும் கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் பொதுக் கடன் 120 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.
இதையடுத்து கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இத்தாலிக்கு உதவ முன் வந்த யூரோ மண்டல நாடுகளின் தலைவர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர். அதில் நாட்டின் செலவுகளைக் குறைக்க பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதியுதவி குறையும் என்பதாலும், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் அதை ஏற்க ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியினரும் மறுத்து வந்தனர்.
இந் நிலையில் இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக சில மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாத வரை இத்தாலிக்கு நிதியுதவி கிடைக்காது என யூரோ மண்டல நாடுகள் அறிவித்துவிட்டன.
இதையடுத்து இந்த மசோதாக்களை நிறைவேற்ற பெர்லுஸ்கோனி ஒப்புக் கொண்டுவிட்டார். அதே நேரத்தில், மசோதாக்கள் நிறைவேறிய பின் ஆட்சியில் தொடர்ந்தால் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாவது நிச்சயம் என்பதால், பதவி விலகவும் முன் வந்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் பொருளாதார சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு அவர் பதவி விலகுவார் என்று இத்தாலி அதிபர் ஜார்ஜியோ நபோலின்டனோ அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நேற்று பெர்லுஸ்கோனியின் அரசு மயிரிழையில் தப்பியது. அந் நாட்டு பட்ஜெட்டை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெறும் 308 ஒட்டுகளுடன் நிறைவேற்றப்பட்டது. அரசு பிழைக்க 316 ஓட்டுக்கள் அவசியம் என்ற நிலையில், எதிர்க் கட்சிகள் ஓட்டெடுப்பை புறக்கணித்ததால், 308 ஓட்டு வாங்கினாலும் அரசு தப்பியது.
அவர்கள் வந்து எதிராக வாக்களித்திருந்தால், மசோதா தோற்கடிக்கப்பட்டு நேற்றே அரசு கவிழ்ந்திருக்கும். நிலைமை மிக மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் ஆட்சியிலிருந்து விலகிவிட பெர்லுஸ்கோனி முன் வந்துள்ளார். நேற்று முன் தினம் வரை அவர் பதவி விலக மாட்டேன் என்று அடம்பிடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், பெர்லுஸ்கோனி பதவி விலகப் போகிறார் என்ற செய்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது. டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு அதிகரித்ததோடு கச்சா எண்ணெய் விலையும் கூட வீழ்ந்தது.
நாடு பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தபோதும் கூட தனது உல்லாச கேளிக்கைகளை பெர்லுஸ்கோனி குறைத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் தனது விருந்தில் பங்கேற்க அழகிகளுக்கு ரூ.13 கோடி வரை அவர் செலவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.