மதுரையில் பயங்கரம்-காவல் நிலையத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவனுக்கு வலைவீச்சு
மதுரை: காவல் நிலையத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன்(43). லாரி டிரைவர். அவருக்கு முத்துலட்சுமி(36) என்ற மனைவியும், பாரதிராஜா(6), மகாலிங்கம்(5), ஜெயக்குமார்(3) என்ற 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த மாதம் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முத்துலட்சுமி தலைமறைவானார். முத்துலட்சுமியின் தந்தை ஆலடி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவையி்ல் உள்ள ஒரு தனியார் மில்லில் முத்துலட்சுமி வேலை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து அழைத்து வரப்பட்ட முத்துலட்சுமியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நேற்று காலையில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன், முத்துலட்சுமி ஆகியோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சமாதானமாக செல்ல 2 பேரும் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் 3 குழந்தைகளையும் யார் வளர்ப்பது என்பதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துலட்சுமியின் கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த போலீசார் முத்துலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்த கண்ணன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி அஸ்ரா கார்க் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தலைமறைவாக உள்ள கண்ணனை பிடிக்க சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணன், முத்துலட்சுமி தம்பதியரின் 3 குழந்தைகளும் 2 வீட்டாரிடமும் ஒப்படைக்கப்பட்டது. முதல் 2 குழந்தைகளை கண்ணன் வீட்டாரும், 3வது குழந்தையை முத்துலட்சுமியின் வீட்டாரும் வளர்க்க முடிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications