முன்னாள் திமுக அமைச்சர் கைது கே.பி.பி.சாமி மீது 'குண்டாஸ்' பாய்கிறது?
சென்னை: ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் மாஜி திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மீது விரைவில் குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.
கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை என்ற மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுனாமி நிதியை முறைகேடு செய்ததாக கே.பி.பி.சாமி மீது குற்றம் சாட்டிய அந்த மீனவரை கடத்திச் சென்று கொலை செய்ததாக அந்த மீனவரின் மனைவி அளித்த புகாரை தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
சாமியின் தம்பி கே.பி.பி. சங்கர் (38) சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மீனவர் செல்லத்துரை கொலை வழக்கிலும், வேலு என்ற மீனவர் கடத்தப்பட்ட வழக்கிலும் சங்கருக்கு தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது இந்த வழக்குகள் தவிர எண்ணூரைச் சேர்ந்த ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தை அபகரித்த வழக்கு போன்ற வழக்குள் உள்ளன.
இந் நிலையில் கே.பி.பி.சங்கரையும், அதே வழக்குகளில் தொடர்புடைய அவரது தம்பி கே.பி.பி. சொக்கலிங்கத்தையும் 1 ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கர் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கே.பி.பி.சாமி மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் இவர் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.