ரயில் பயணிகள் கட்டணம் இப்போதைக்கு உயராதாம்!- சரக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு அமைச்சர் சொல்கிறார்
ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்துவிட்டு, சமீபத்தில் சரக்குக் கட்டணத்தை ரயில்வே சத்தம் போடாமல் உயர்த்தியது. அதுவும் பணவீக்கம் அதிகமாகி உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், உணவு தானியங்களுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தியது. இதனால் அதன் விலைவாசி மேலும் உயர்ந்தது.
இந் நிலையில் நிதி நெருக்கடியில் இருக்கும் ரயில்வே மத்திய அரசிடம் கடன் கோரி வருகிறது. இதனால் விரைவிலேயே பயணிகள் கட்டணமும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அமைச்சர் கே.எச். முனியப்பா அளித்த பதிலில், பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை.
சமீபத்தில் சரக்குக் கட்டணம் கூட மிகக் குறைந்த அளவுக்குத்தான் உயர்த்தப்பட்டது. உணவு தானியங்கள், உரம் ஆகியவற்றைப் பொருத்தவரை ஒரு கிலோவுக்கு 1,000 கிலோ மீட்டருக்கு 5 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்கு ஒரு கிலோவுக்கு 4 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
வெங்காயத்துக்கு கிலோ ஒன்றுக்கு 3 பைசாவும், சமையல் எண்ணெய்க்கு கிலோ 6 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.1,914 கோடி கிடைக்கும்.
ரயில்வே துறைக்கு தாற்காலிகக் கடனாக ரூ. 2,100 கோடியை வழங்குமாறு நிதியமைச்சகத்திடம் கோரினோம். ஆனால், கடன் தர நிதியமைச்சகம் மறுத்துவிட்டது. கடன் கோரி மீண்டும் நிதியமைச்சகத்தை அணுகுவோம் என்றார் அமைச்சர்.