மிட்-டே நிருபர் ஜே.டே கொலை வழக்கில் பெண் பத்திரிக்கையாளர் கைது!
மும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் பிரிவு நிருபர் ஜே.டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இன்னொரு பெண் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்டர்வோர்ல்ட் தாதாக்கள் பற்றிய பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டவர் மிட் டே பத்திரிக்கையின் மூத்த நிருபரான ஜே.டே. இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி பட்டப் பகலில் மும்பையின் போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
தாவூத் இப்ராகிம் உள்பட பல தாதாக்களின் கூலிப் படைகளின் செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் இவர் என்பதால், அவரை ஏதோ ஒரு தாதா கும்பல் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் மோசடிகள், சந்தனக் கட்டை கடத்தல், டீசல்-பெட்ரோல் கலப்படம் குறித்தும் இவர் செய்திகளை வெளியிட்டு வந்தார். குறிப்பாக தாதா சோட்டா ராஜன் கும்பலின் பெட்ரோல் கலப்படம் குறித்து இவர் விளக்கமாக எழுதி வந்தார்.
இதையடுத்து இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் இவரை விலைக்கு வாங்கவும் அந்தக் கும்பல் முயன்றது. ஆனால், எதற்கு பணியாமல் தொடர்ந்து இந்தக் கும்பலின் அட்டூழியங்களை எழுதி வந்தார். இந் நிலையில் தான் டே கொலை செய்யப்பட்டார்.
இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த 4 பேர் ஜூன் 15ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் மும்பை ரியல் எஸ்டேட் அதிபரான வினோத் அஸ்ரானி உள்ளிட்ட 7 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இப்போது திடீர் திருப்பமாக, இந்த வழக்கில் பெண் பத்திரிக்கையாளரான ஜிக்னா வோரா கைது செய்யப்பட்டுள்ளார். சோட்டா ராஜனுக்கு ஜே.டேவின் வீட்டு முகவரி, மோட்டார் சைக்கிள் எண் ஆகிய விவரங்களை இவர் தந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக சோட்டா ராஜனின் கூட்டாளிகளுடன் ஜிக்னா வோரா தொலைபேசியில் பேசிய பேச்சுக்களின் ஆதாரங்களையும் மும்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கொலை விவகாரத்தில் வோராவிடம் ஏற்கனவே போலீசார் பலமுறை விசாரணை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜே.டேவின் கொலை நடந்தவுடன் இதன் பின்னணியில் தாவூத் இப்ராகிம் இருக்கலாம் என்றரீதியில் தான் வேலை பார்க்கும் பத்திரிக்கையில் திசை திருப்பல் செய்திகளையும் வோரா வெளியிட்டதாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.