அன்னிய முதலீட்டை எதிர்த்து டிசம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் கடையடைப்பு
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரும் திட்டத்தை திரும்ப பெறக்கோரி டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதன் தலைவர் விக்கிரமராஜா,
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் மட்டும் 20 லட்சம் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை சார்ந்து ஏறக்குறைய 1 கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந் நிலையில் சில்லறை வணிகத்தை அன்னிய நிறுவனங்கள் கையில் ஒப்படைத்தால் 1 சில லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகிறார்.
இது கேலிக் கூத்தாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பவர்களை இடைத் தரகர்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டையும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் 100 சதவித அன்னிய முதலீட்டையும் அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரமைப்பு சார்பில் 5 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
நாடு முழுவதும்...
வரும் டிசம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்த அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு டெல்லியில் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தமிழகத்தில் உள்ள வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் அழைப்பு குறித்து எங்களின் அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசினோம்.
இதில் அகில இந்திய வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று வரும் டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் என்றார்.