முல்லைப் பெரியாறில் புதிய அணை கோரி கேரளாவில் முழு அடைப்பு- ஜெ. கொடும்பாவி எரிப்பு
முல்லைப் பெரியாறு அணை தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பித்தான் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாநில விவசாயிகள் உள்ளனர். ஆனால் இந்த அணை பழையதாகி விட்டது. இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் பேர் சாவார்கள் என்று கூறி அணையை இடித்துத் தள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது கேரள அரசு. மேலும் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலும் பல்வேறு வேலைகளில் இறங்கியுள்ளது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான வேலைகளையும் அது முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய அணையைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் அழைப்பு விடுத்தன.
அதன்படி இன்றுகாலை 6 மணியளவில் அந்த மாவட்டங்களில் முழு அடைப்பு்ப போராட்டம் தொடங்கியது. மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு மாவட்டங்களிலும் முழு அடைப்பு நடந்து வருகிறது.
ஆளும் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி மற்றும் பாஜக ஆகியவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
வண்டிப்பெரியார், குமுளி, சப்பாத்து ஆகிய இடங்களில் ப்லவேறு கட்சியினர் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கண்டித்துக் கோஷம் எழுப்பப்பட்டது.
இடுக்கியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர் போராட்டக்காரர்கள்.
பல இடங்களில் இடதுசாரி கட்சியினர் திரண்டு, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி ஆகியோரைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். கேரளாவுக்கு சாதகமாக மத்திய அரசை திருப்ப இவர்கள் தவறி விட்டதாக அப்போது இவர்கள் கோஷமிட்டனர்.
சிபிஐ பொலிட்பீரோ உறுப்பினரான கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும். முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டுவதுதான் ஒரே வழி என்பதை மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் ஆணித்தரமாக வலியுறுத்த அவர் தவறி விட்டார் என்றார்.
தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
இதற்கிடையே தேக்கடி அருகே திரண்ட ஒரு கும்பல், தமிழகத்திலிருந்து வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது.
உண்ணாவிரதப் போராட்டம்
இதேபோல ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கேரள காங்கிரஸ் மணி கட்சியின் தலைவரும், எம்.பியுமான ஜோஸ் கே. மணி நாடாளுமன்றம் முன்பு இதே கோரிக்கைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இடுக்கி எம்.எல்.ஏ. ரோஸி அகஸ்டின் கேரள சட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
இவை தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் புதிய அணை கோரி பல்வேறு விதமான போராட்டங்கள்நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.