மறுபடியும் ராம்லீலா மைதானம் கெடச்சிருச்சு.. ஹசாரே: யாரு சொன்னா?.. டெல்லி மாநகராட்சி!
டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி தரப்பட்டது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என அன்னா ஹசாரே அறிவித்தி்ருந்தார்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையிலும் இன்னும் லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் கூட செய்யவில்லை. லோக்பால் வரைவு மசோதா தற்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் இருந்து வருகிறது.
இந் நிலையில், டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மீண்டும் டெல்லி ராம்லீலா மைதானத்தை ஒதுக்கக் கோரி ஹசாரே டெல்லி மாநராட்சியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி மாநகராட்சி அனுமதி வழங்கிவிட்டதாக அன்னா ஹசாரே குழு கூறுகிறது.
ஆனால், அப்படி ஏதும் அனுமதி கொடுக்கவில்லை என்று டெல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். ஹசாரே குழுவினரிடம் இருந்து விண்ணப்பம் வந்துள்ளது. அதன் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறுகையில், ஹசாரே குழுவுக்கு அனுமதி எதுவும் தரப்படவில்லை என்றார்.
மசோதா விவகாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் மீண்டும் ஹசாரே போராட்டத்தை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. அது உண்ணாவிரதமா அல்லது வேறு வகையான போராட்டமா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே இவரது குழுவைச் சேர்ந்தவர்களே பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று முன் தினம் இந்தத் குழுவைச் சேர்ந்த கிரண்பேடி இரண்டாவது முறையாக நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளார்.
வன்முறையை தூண்டும் ஹசாரே-திக்விஜய் சிங்:
காந்தியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஹசாரே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய விவசாயத்துறை சரத்பவார், இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் குறிது கருத்து தெரிவித்த ஹசாரே, அந்த இளைஞர், சரத்பவாரை ஒருமுறைதான் அடிதாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ட்விட்டர் இணையத்தளத்தில் திக்விஜய் கூறியிருப்பது, அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டார் என்ற தகவல் வந்தவுடன், அவரை ஓர் அடிதான் அடித்தார்களா என்று கேட்பதுதான் காந்தியவாதி நடந்து கொள்ளும் முறையா, அவரை மேலும் தாக்க வேண்டும் என்று தூண்டுவது தானே இதன் உள் அர்த்தம்.
ஹசாரேவின் குழுவில் உள்ள காவல்துறை முன்னாள் அதிகாரியான கிரண் பேடியே, சட்டத்தை மீறி செயல்படுங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுகிறார். முன்னாள் சட்ட அமைச்சரான சாந்தி பூஷண், நீதிபதிகள் மூலம் சாதகமாக தீர்ப்பு வழங்க பேரம் பேசுகிறார்.
ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்த அரவிந்த் கேஜரிவால், எங்கிருந்து நன்கொடை பெறுகிறார் என்பதே தெரியவில்லை என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
இன்று மெளன போராட்டம்:
இந் நிலையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி இன்று டெல்லியில் அன்னா குழுவினர் மெளனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.