கேரளத்தின் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்: பழ. நெடுமாறன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நியாயங்களையும் உரிமைகளையும் விளக்கிக் கூற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முற்றிலும் பொய்யானப் புகாரைக் கூறியிருக்கிறார்கள்.
பெரியாறு அணை உடைந்து அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான மக்கள் செத்து மிதப்பது போன்ற பொய்மை நிறைந்த காட்சிகள் அடங்கிய 'டேம் 999' என்ற திரைப்படத்தை கேரள முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் பார்த்த திரைப்படக் காட்சி ஒன்றும் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது.
ஆக, டெல்லியிலிருந்து சகல முயற்சிகளும் செய்து பெரியாறு அணையை இடித்துத் தகர்த்துவிட்டு புதிய அணை கட்டியே ஆகவேண்டும் என பிடிவாதமாக கேரள அரசும், அந்த மாநில அனைத்துக் கட்சிகளும் செயல்படுகின்றன.
கேரளத்தின் பொய்யானப் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் செய்திருந்த போதிலும் அதுமட்டும் போதாது.
கேரளத்தின் சதியை முறியடிக்க வேண்டுமானால், தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நியாயங்களையும் உரிமைகளையும் விளக்கிக் கூற வேண்டும்.
அதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கைக் குறித்து அனைவரும் ஒற்றுமையுடன் பேசி முடிவெடுத்துச் செயல்பட்டாக வேண்டும். விரைவாக இந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாவிட்டால் கேரளம் தனது சூழ்ச்சியில் வெற்றி பெற்றுவிடும். தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்து போகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.