பால் விலை.. உயர்த்தியது 6 ரூபா.. குடுக்குறது 2 ரூபா: வைகோ
சென்னை: ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்துக்கு வந்தபோதுதான் நாடு அடிமையானது. இப்போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் மீண்டும் அத்தகைய நிலைமை வரும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதிமுக சார்பில் சென்னையில் அக் கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய வைகோ, பால் விலை, பஸ் கட்டண உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் தலையில் பாறாங் கல்லை வைத்ததுபோல உள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.6 உயர்த்திவிட்டார்கள். ஆனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு லிட்டருக்கு ரூ.2 தான் அதிகமாக கொடுக்கிறார்கள்.
அதே போல பஸ் கட்டணத்தை 70 சதவீதம் முதல் 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். இதனால்,
பஸ்களில் பயணம் செய்பவர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தமிழக அரசு மக்கள் உணர்வுகளை மதிக்கவில்லை. தமிழின விரோதமாக செயல்படும் மத்திய அரசு சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க அனுமதி அளிப்பது மீண்டும் நாட்டை அடிமைத்தனத்துக்குக் கொண்டு போய்விடும்.
ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்துக்கு வந்தபோதுதான் நாடு அடிமையானது. இப்போது அன்னிய முதலீட்டை அனுமதித்தால் மீண்டும் அத்தகைய நிலைமை வரும்.
வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை அனுமதித்தால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் அழிந்து விடும். இந்த அக்கிரமத்தை அனுமதிக்க முடியாது என்றார்.