போலீஸ் மீது நடவடிக்கை கோரி நள்ளிரவில் மறியல் செய்த மாணவர்கள் மீது தடியடி!
திருச்சி: மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று நள்ளிரவு சாலை மறியல் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 3 பேர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் ரயில் நிலைய வளாகத்துக்கு வந்தனர். இதைபார்த்த போலீசார் வண்டியை நிறுத்தும்படி கூறினர். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்கினர். அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஓட்டுநர் உரிமத்தை போலீசார் கேட்டதாக தெரிகிறது.
உடனே மாணவர்கள் இது குறித்து மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் சீனியர் மாணவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர்.
இது குறித்து அவர்கள் போலீசாரிடம் கேட்டபோது போலீசார் மாணவர்களையும், மாணவர் சங்க தலைவர் சைமனையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமுற்ற அனைத்து மாணவர்களும் ரயில்நிலைய ரவுண்டானா ரோட்டில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாண்டியன், உதவி கமிஷனர்கள் சீனிவாசன், காந்தி, இன்ஸ்பெக்டர் சிகாமணி, பால்சுதர், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர் பிரச்சினை குறித்து அறிந்த டீன் கார்த்திகேயனும் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேசினார். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் ஜங்சன் ரவுண்டானாவை விட்டு கலைந்து மத்திய பஸ் நிலையம் நோக்கி சென்றனர்.
அங்கும் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆர்.டி.ஓ. சம்பத் தலைமையில் அரசு ஆஸ்பத்திரியில் பேச்சுவார்த்தை நடந்தது.