முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசலாம்- ஜெ.வுக்கு பிரதமர் அழைப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு தொடர்பாக கேரளாவின் சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள பதில் கடிதம்:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாங்கள் எழுதிய முந்தைய கடிதங்களையும் கடந்த 29-ந் தேதி எழுதிய கடிதத்தையும் பெற்றேன். அவற்றில் நீங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை கவனத்தில் கொண்டுள்ளேன். அதுபோல, கேரள அமைச்சர்கள் குழுவினர் என்னை சந்தித்து தெரிவித்த பிரச்சினைகளையும் கேட்டேன்.
தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி முன்பு இந்த விவகாரம் இருப்பதை அவர்களிடம் தெரிவித்தேன். மக்கள் மத்தியில் பீதி கிளப்பும் விதமாக அர்த்தமற்ற வகையில் பேசவோ, செய்யவோ கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மேலும், இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலமாக பரஸ்பர, சுமூகமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும் என கருதுகிறேன். எனவே, நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அர்த்தமுள்ள கவலைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.