கூடங்குளம் விவகாரத்தில் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: ராம.கோபாலன் கண்டனம்
மதுரை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடததப்பட்டது. இந்த ஆர்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்த மாநில துணைத் தலைவர் ஜெயக்குமாரின் மொபைல்போனுக்கு, கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 2 பேர் அழைத்தனர். அவர்கள் போனில் ஆபாசமாக பேசி ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் தங்கள் கருத்தை மக்கள் முன் எடுத்து வைக்க எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதேபோல அதனை மறுத்து உண்மை நிலையை எடுத்துரைக்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் போலீசார் உடனே நடவடிக்கைஎடுத்து இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.