அலுவலகம் பறிக்கப்பட்டது என்று அதிமுக பொய் பிரசாரம்: அழகிரி
மதுரை: மதுரையில் உள்ள எனது அலுவலகம் பறிக்கப்படவில்லை நானாகத் தான் அதை ஒப்படைத்தேன். மாநகாரட்சி கமிஷனர் அந்த உண்மையை மறைக்கிறார். அதை பயன்படுத்தி அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது என்று திமுக எம்பி அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.
இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை கடந்த 30ம் தேதி மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்து அந்த இடத்தை மேற்கு மண்டல அலுவலகமாக்க அதை மாநகராட்சி கமிஷனர் நடராஜன் மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார்.
அண்ணன் ஊரில் இல்லாத நேரம் பார்த்து அவரது எம்.பி. அலுவலகத்தை பறித்துக் கொண்டுள்ளார்களே என்று அழகிரியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் பறிக்கப்பட்டபோது அழகிரி டெல்லியில் இருந்தார்.
இந்த தகவல் கேட்டு அவர் கடந்த 30ம் தேதி அவசர, அவசரமாக மதுரை திரும்பினார். நேற்று இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் கடந்த மாதம் 1ம் தேதியே அந்த அலுவலகத்தின் சாவியை மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் ஒப்படைத்துவிட்டேன். சாவியைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எனது அலுவலகம் பறிக்கப்படவில்லை. அதை நானாகத் தான் ஒப்படைத்தேன்.
இந்த உண்மையை கமிஷனர் வெளியே சொல்லாமல் மறைக்கிறார். அதை பயன்படுத்தி அதிமுக பொய் பிரச்சாரம் செய்வது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது என்றார்.