ஓய்வூதியதாரர்களின் ஆதரவற்ற மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒய்வூதியம்- அரசு
சென்னை: அரசு ஓய்வூதியம் பெறும் ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சங்கத்தினரின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசின் வழியில், தமிழக அரசும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கான நிபந்தனைகள் குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளும், கணவரை இழந்த மற்றும் விவாகரத்தான மகள்களும் வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம். திருமணமோ, மறுமணமோ புரிந்தால் அவர்களின் ஓய்வூதியம் உடனடியாக நிறுத்தப்படும். இதை உறுதி செய்யும் வகையில் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருமணம் அல்லது மறுமணம் புரியாமைக்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
மூத்தவருக்கு முன்னுரிமை
வயது அடிப்படையில் மூத்தவருக்கு முதலில் வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ, இறக்க நேரிட்டாலோ மட்டுமே இளைய மகள் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும். மாத வருமானம் 2 ஆயிரத்து 550 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெறலாம். இந்த உத்தரவு நவம்பர் 28ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.