கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும்- கருணாநிதி
சென்னை: கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசும் தடுக்கவில்லை,மத்திய அரசும் தடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் திமுக தனது செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவை எடுக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கேரள எல்லையில் தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமான செயல்கள் நடக்கின்றனவே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக வன்முறைச் செயல்கள் அங்கே நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்த கேரள அரசும் முன்வரவில்லை. தடுத்து நிறுத்த கடமைப்பட்டுள்ள மத்திய அரசும் இதுவரை முன்வரவில்லை. எனவே இந்த நிலைமை அங்கே தொடருமேயானால், அதுபற்றி தி.மு.க. செயற்குழு கூடி உரிய முடிவெடுக்கும் என்றார் கருணாநிதி.
முல்லை பெரியாறு அணை குறித்து தி.மு.க.வின் நிலை என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,
எங்களுடைய நிலை குறித்து நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். 4-12-2011 அன்று முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்துக்கு தி.மு.க. சார்பில் அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள மாநில அரசின் வேண்டுகோளை ஒருபோதும் ஏற்கக்கூடாது என்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் 2006-ம் ஆண்டு உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும்,
முல்லைப் பெரியாறு அணை குறித்து, பொதுமக்களிடையே தேவையின்றி அச்ச உணர்வையும், பீதி மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,
முல்லைப் பெரியாறு அணை குறித்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு காணப்படும் வரை, அணைப்பகுதி உள்ள இடத்தை கேரள மாநில போலீசார் காவல் காத்து வருவதற்குப் பதிலாக, மத்திய பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பில் விடவேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
நீதிபதி ஆனந்துக்கு இந்தக் கடிதத்தில் நான் எழுதியுள்ள கருத்துக்கள் தான், தி.மு.க.வின் இன்றைய கருத்தாகும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications