கேரள மாநிலத்தவர்கள் கடைகளை தாக்கிய தமிழ்தேசப் பொதுவுடமை கட்சியினர் கைது
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கேரளமாநிலத்தவர் நடத்தும் கடைகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி அவற்றின் மீது தாக்குதல் நடத்திய தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கேரளாவிற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநிலத்தவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியினர் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
3ம் தேதி மதுரையில் நடந்த போராட்டத்திற்கு பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேசுகையில்,
கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.
ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.
கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது.
நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.
குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்த நிலையில், இன்று காலையில் கோவையில் உள்ள கேரளமாநிலத்தவர் நடத்தும் கடைகளின் முன்பு கூடிய தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியினர் முல்லைப்பெரியாறு அணை உரிமையை மறுக்கும் மலையாளியே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று என்ற ஆவேச முழக்கத்துடன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
முல்லைப்பெரியாறு அணை பற்றி விளக்கும் நோட்டீஸ்களையும் அப்போது அவர்கள் விநியோகம் செய்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க வினரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த நோட்டீஸ்களையும் பறிமுதல் செய்தனர்.
கடைகள் மூடப்பட்டன
இப்போராட்டத்தால் கேரளமாநிலத்தவரின் ஜாய் ஆலுக்காஸ், பிரின்ஸ், ஆலுக்காஸ் ஜோசப் ஆலுக்காஸ், கஜானா, முத்துட், மணப்புரம் கோல்டு உள்ளிட்ட மலையாளிகளின் நகை நிறுவனங்களும் காந்தி புரத்தைச் சுற்றியுள்ள பெருமளவிலான பேக்கரிகளும் கடைகளும், தேனிர் கடைகளும் மூடப்பட்டன.
இதேபோன்று சென்னை தியாகராய நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தை த.தே.பொ.க வினர் முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து அந்த நிறுவனத்தினர் வெளிக்கதவை சாத்திவிட்டு ஊழியர்களை பாதுகாப்பாக கடையினுள் தங்கவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்த போலீசார் கடைமுன்பு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இதேபோன்று ஓசூர், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலும் கேரளமாநிலத்தவரின் கடைகளின் முன்பு போராட்டம் நடத்திய தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.