கிங்பிஷர் எபெக்ட்!: இந்திய விமான நிறுவனங்களில் 26% அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு திட்டம்
கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கு உதவும் வகையில், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அதே நேரத்தில் தனது நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறி, சகட்டுமேனிக்கு விமானங்களை ரத்து செய்து, பயணிகளை திண்டாட வைத்த விஜய் மல்லையா, விமானப் போக்குவரத்துத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி மத்திய அரசு நெருக்கி வந்தார்.
மத்திய அரசை நெருக்குவதற்காகக் தான், திடீரென விமான சேவைகளை அவர் ரத்து செய்யதாகவும் பேச்சு உண்டு. மல்லையாவைப் போவலே பிற விமான நிறுவனங்களும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்கு நெருக்குதல் தந்து வருகின்றன.
பெரும் பணக்காரர்களான இந்த முதலாளிகள் அரசியல்ரீதியிலும் நெருக்கடி தந்து வருவதையடுத்து, இந்தத் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று இந்திய விமானப் போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முதலில் 24 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று கூறிய விமானப் போக்குவரத்துத்துறை, இப்போது அதை 26 சதவீதம் வரை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தத்துறையின் அமைச்சராக இருப்பவர் கேரளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான வயலார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்துறையின் இந்த பரிந்துரைக்கு திட்டக் கமிஷனும், உள்துறை அமைச்சகமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சகம், இதன்மூலம் பங்குச் சந்தை விதிகள் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.
இப்போதைக்கு இந்தத்துறையில் சரக்குப் போக்குவரத்து விமான சேவை நிறுவனங்களில் மட்டுமே 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இனி பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்களிலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 26 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.