தமிழ்நாட்டை பேச்சு வார்த்தைக்கு அழையுங்கள்- பிரதமரிடம் கேரள முதல்வர் நேரில் கெஞ்சல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி உயரத்திற்கு தேக்கி வைத்தால் நிலநடுக்கம் வந்தால் பாதிப்பு ஏற்படும், அணை உடையும், எனவே நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம், ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு தனது பரி்ந்துரைகளை தரும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது.
இருப்பினும் பேச்சுவார்த்தை என்ற ஒரே அஸ்திரத்தையே மீ்ண்டும் மீண்டும் கேரளா கையில் எடுத்து வருகிறது. அதே கோரிக்கையுடன் உம்மன் சாண்டியும் அவரது தலைமையிலான கேரள அனைத்து கட்சிக் குழுவினரும் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று சந்தித்து மனு அளித்தனர்.
தண்ணீர் தர ரெடி
அதில், இந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் 26 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டதாலும், அணைக்கு ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. எனவே புதிய அணை கட்டி, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு பழைய அளவிலேயே தண்ணீர் வழங்க தயாராக உள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்கவும், சுமூக தீர்வு காணவும் தமிழ்நாடுஅரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று உம்மன் சாண்டி தலைமையிலான குழுவினர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பிரதமர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது தெரியவில்லை.